செய்திகள்
சிம்லாவில் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் வீதிக்கு வந்த மக்கள் - சொகுசு ஓட்டல்கள் மூடல்
இமாச்சலப்பிரதேசம் தலைநகர் சிம்லாவில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடும் நிலையில், பொதுமக்கள் முதல்வர் மற்றும் மந்திரிகளின் வீட்டை முற்றுகையிட்டு போராடத் தொடங்கியுள்ளனர்.
சிம்லா:
இமாச்சலப்பிரதேசம் தலைநகரான சிம்லா பிரபல சுற்றுலாத் தளமாகும். தற்போது கோடைக்காலம் என்பதால் அங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக சிம்லா நகரில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
நகரத்திற்கு தண்ணீர் வழங்கும் ஏரிகளில் போதிய நீர் இல்லாத காரணத்தால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டது. ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 22 மில்லியன் லிட்டர் தேவை என்ற நிலையில், தற்போது 18 மில்லியன் லிட்டர் தண்ணீரே கிடைக்கிறது. அதுவும், லாரிகள் மூலம் வழங்கப்படுகிறது.
போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் பெரும்பாலான சொகுசு ஓட்டல்கள் மூடப்பட்டன. முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டன. பொதுமக்கள் தண்ணீருக்காக நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய துயரம் உள்ளது. இதனால், கொதிப்படைந்த பலர் முதல்வர் மற்றும் மந்திரிகள் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.