செய்திகள்

ஆந்திராவில் ராட்சத ராட்டினம் கவிழ்ந்த விபத்தில் 10 வயது சிறுமி பலி

Published On 2018-05-28 06:05 GMT   |   Update On 2018-05-28 06:05 GMT
ஆந்திர மாநிலம் அனந்த்பூர் மாவட்டத்தில் நேற்று இரவு இராட்சத ராட்டினம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 வயது சிறுமி உயிரிழந்தார். மேலும் 6 குழந்தைகள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். #giantwheelcrash
ஐதராபாத்:

ஆந்திர மாநிலம் அனந்த்பூர் மாவட்டத்தில் உள்ள ஜூனியர் கல்லூரி மைதானத்தில் பொருட்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதாலும், கோடை விடுமுறை காலம் என்பதாலும் பொருட்காட்சியில் பெருமளவில் மக்கள் திரண்டிருந்தனர்.

இந்நிலையில், பொருட்காட்சியில் வைக்கப்பட்டிருந்த இராட்சத இராட்டினம் வேகமாக இயங்கிக்கொண்டிருந்த போது அதன் பெட்டி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அம்ருதா என்ற 10 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.



மேலும் 6 பேர் படுகாயங்களுடன் அனந்த்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக அந்த ராட்டினத்தின் போல்ட்டுகள் தளர்ந்திருப்பதாக ராட்டினத்தினை இயக்குபவரிடம் எச்சரிக்கை செய்யப்பட்டதாகவும், ஆனால் அவர் குடிபோதையில் இருந்ததால், அதனை கண்டுகொள்ளவில்லை எனவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, அந்த நபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விபத்து குறித்து முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. #giantwheelcrash
Tags:    

Similar News