செய்திகள்

கவர்னர் மாளிகையில் கொள்ளையர்கள் கைவரிசை - 5 சந்தன மரங்கள் கடத்தல்

Published On 2018-05-03 07:24 GMT   |   Update On 2018-05-03 07:24 GMT
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அமைந்துள்ள கவர்னர் மாளிகையில் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி 5 சந்தன மரங்கள் வெட்டி, கடத்தப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.#MaharshtraRajBavan #SandalwoodTheft
புனே:

மகாராஷ்டிரா மாநிலத்தின் தற்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ். இவர் கடந்த ஆண்டில் தமிழகத்திற்கும் பொறுப்பு ஆளுநராக இருந்தவர். இவர் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதையடுத்து தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டார்.

தற்போது மகாராஷ்டிராவின் ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் இருந்த 5 சந்தன மரங்கள் மர்ம நபர்களால் வெட்டி கடத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 30ஆம் தேதி இரவு நடைபெற்ற கொள்ளை சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை இணை ஆணையர் ரவீந்திர கடம் பேசுகையில்., ராஜ் பவனின் பாதுகாப்பினை போதுமான அளவில் அதிகப்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.



இதே போன்ற சம்பவம் கடந்த 2016ஆம் ஆண்டிலும் நிகழ்ந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தொடரும் போதிலும் ராஜ் பவனில் ஒரே ஒரு காவலர் மட்டுமே கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டிற்கு முன்னர் வரை 3 காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்த நிலையில் புனே காவல்துறையில் காவலர் பற்றாக்குறை காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக ஒரே ஒரு காவலர் மட்டுமே பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

மேலும் ராஜ் பவன் வளாகத்தில் சிசிடிவி கேமரா வசதி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சிசிடிவி கேமரா வசதி செய்து தருவதற்கான கோரிக்கையும் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் புனே நகர காவல் துறையிடம் நிலுவையில் உள்ளது என்றும் ராஜ் பவன் வட்டாரம் அதிருப்தி தெரிவித்துள்ளது. #MaharshtraRajBavan #SandalwoodTheft
Tags:    

Similar News