செய்திகள்

போலி சாதிச்சான்றிதழ் மூலம் வேலைக்குச் சேர்ந்தவர்களின் பதவி, பட்டங்களை பறிக்கலாம்: உச்ச நீதிமன்றம் அதிரடி

Published On 2017-07-06 11:56 IST   |   Update On 2017-07-06 11:56:00 IST
போலி சாதிச்சான்றிதழ்களை பெற்று அதன் மூலம் வேலைக்கு மற்றும் கல்லூரியில் சேர்ந்தவர்களின் பதவி மற்றும் பட்டம் ஆகியவற்றை அரசு பறிக்கலாம் என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுடெல்லி:

மராட்டிய மாநிலத்தில் போலியாக சாதிச்சான்றிதழ்களை பெற்று பலர் இடஒதுக்கீட்டை முறைகேடாக பயன்படுத்தி அரசுப் பணியில் சேர்ந்துள்ளதை கண்டறிந்த அரசு, அவர்களை டிஸ்மிஸ் செய்து அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையால் பாதிக்கப்பட்ட ஒருவர், “வெகு காலமாக அரசுப்பணியில் இருப்பதாகவும், தற்போது எனது சாதிச்சான்றிதழ் போலி எனக் கண்டறியப்பட்டுள்ளதால் வேலை பறிபோகும் வாய்ப்பு உள்ளது” என மும்பை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இதனையடுத்து, இந்த அரசாணைக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து, மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மராட்டிய அரசு மேல்முறையீடு செய்தது. இந்நிலையில், இவ்வழக்கு இன்று தலைமை நீதிபதி ஜே.எஸ் கேஹர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, "ஒருவர் போலிச் சான்றிதழ் பெற்று நீண்ட காலம் அரசுப்பணியில் இருந்தார் என்பதற்காக அவருக்கு விலக்கு அளிக்க முடியாது” எனக் கூறிய நீதிபதிகள், போலி சான்றிதழ்களை அளித்து முறைகேடான வழியில் அரசுப்பணிக்கு சேர்ந்தவர்களின் வேலை மட்டுமின்றி கல்லூரியில் சேர்ந்தவர்களின் பட்டங்களையும் பறிமுதல் செய்யலாம் என அதிரடியாக உத்தரவிட்டனர்.

மேலும், இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய இயலாது எனவும், இத்தீர்ப்பு உடனே நடைமுறைக்கு வருவதாகவும் நீதிபதிகள் தனது தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

Similar News