செய்திகள்

ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களை கலக்கிய கொள்ளையன் கைது

Published On 2017-03-18 11:16 IST   |   Update On 2017-03-18 11:16:00 IST
ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களை கலக்கிய கொள்ளையனை கைது செய்த போலீசார் அவனிடமிருந்து 250 கிராம் தங்கம், 9 கிலோ வெள்ளி ஆகியவற்றை போலீசார் மீட்டனர்.
திருப்பதி:

திருப்பதி பகுதியில் திருட்டு மற்றும் குற்றவழக்குகளில் தலைமறைவானவர்களை பிடிக்க குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏ.சத்யநாராயணா தலைமையில் தனிப்படை ஒன்றை திருப்பதி புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயலட்சுமி அமைத்து உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சந்தேகத்தின்பேரில் ஒருவரை பிடித்தனர். விசாரணையில் அவர் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த பாலப்பா என்பவரின் மகன் மகேஷ் (வயது 38) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் இவர் 19 வயதாக இருக்கும் போதிலிருந்தே பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். ஐதராபாத்தில் கடந்த 2003-ம் ஆண்டு இப்ராகிம் என்பவருடன் சேர்ந்து ஒருவரை கொலை செய்த வழக்கிலும், விஜயவாடாவில் கடந்த 2010-ம் ஆண்டு டிரைவரை கொன்று காரை திருடிய சம்பவத்திலும், 2011-ம் ஆண்டு சக குற்றவாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்திலும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

மேலும் ஐதராபாத் மற்றும் செகந்திராபாத் பகுதியில் 11 வீடுகளில் கொள்ளையடித்த சம்பவத்தில் கைதாகி ஜாமீனில் வெளி வந்த இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு சென்று தலைமறைவாகிவிட்டார்.

அந்த மாநிலத்தில் 2 குற்ற வழக்குகளும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் 17 குற்ற வழக்குகளும் இவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.



கைதான மகேஷிடமிருந்து 250 கிராம் தங்கம், 9 கிலோ வெள்ளி, மற்றும் எல்.இ.டி. டிவி, செல்போன், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் மீட்டனர்.

மேலும் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.12 லட்சம் வரை இருக்கும். கைதான மகேஷிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News