செய்திகள்

காவிரி நீரை வழங்காத கர்நாடகம் இழப்பீடு வழங்க வேண்டும்: தமிழக அரசின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

Published On 2016-08-17 02:06 GMT   |   Update On 2016-08-17 02:06 GMT
தீர்ப்பாய உத்தரவின்படி காவிரியில் உரிய தண்ணீரை திறந்து விடாத கர்நாடக அரசிடம் ரூ.2,500 கோடி இழப்பீடு கேட்டு தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணை ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
புதுடெல்லி:

தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் 2013-ம் ஆண்டு மே மாதம் தாக்கல் செய்த மனுவில், 21 ஆண்டுகளாக சம்பா, குறுவை பயிர்களுக்கு ஜூன், செப்டம்பர் மாதங்களில் கர்நாடகா அரசு தண்ணீரை திறந்துவிட்டது கிடையாது. காவிரி நதிநீர் பங்கீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவை அந்த அரசு எப்போதும் மதிப்பதில்லை.

மத்திய அரசு பிறப்பித்த இடைக்கால உத்தரவையும் கர்நாடக அரசு நிறைவேற்ற தவறிவிட்டது. இதனால் தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தி தடைப்பட்டது. இதன்மூலம் தமிழகத்துக்கு ரூ.1,045.75 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மேலும் தீர்ப்பாயத்தின் உத்தரவை நிறைவேற்றாததால் ஏற்பட்ட நஷ்டங்களுக்காக கர்நாடக அரசுக்கு ரூ.1,434 கோடி அபராதம் விதிக்க வேண்டும். இந்த இழப்பீட்டை தமிழகத்துக்கு மொத்தமாக சேர்த்து ரூ.2,500 கோடி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தது.

இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் வி.கோபால கவுடா, ஏ.கே.கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் ராகேஷ் திவிவேதி, வக்கீல் ஜி.உமாபதி ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

கர்நாடக அரசு தரப்பில் மூத்த வக்கீல் பாலி நாரிமன் ஆஜராகி, இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை இருதரப்பும் சரிபார்த்ததாகவும், வழக்கின் முக்கிய அம்சங்களை இருதரப்பும் பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், இருதரப்பினரும் சேர்ந்து முடிவாக வழக்கில் விவாதிக்க வேண்டிய அம்சங்களின் மீதான பதில்களை ஒரு வார காலத்துக்குள் பட்டியலாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். வழக்கின் மீதான விசாரணையை ஒரு வார காலத்துக்கு ஒத்திவைத்தனர்.

Similar News