சினிமாவில் நடிக்க வைப்பதாக ஏமாற்றி 17 வயது சிறுமியை கடத்திய டைரக்டர் நண்பருடன் கைது
- சிறுமி சினிமா டைரக்டர் ஜாசிக் அலி என்பவருடன் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்தது.
- மீட்கப்பட்ட 17 வயது சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோட்டை அடுத்த வடகரை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி திடீரென மாயமானார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் வடகரை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் சிறுமி அதே பகுதியை சேர்ந்த சினிமா டைரக்டர் ஜாசிக் அலி (வயது 36) என்பவருடன் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்தது. மேலும் ஜாசிக் அலி, சிறுமியை சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ஜாசிக் அலியின் செல்போன் மூலம் அவர்களின் இருப்பிடத்தை தேடினர். இதில் அவர்கள் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மறைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் உடனே பெங்களூரு சென்று அவர்களை தேடினர். இதில் அவர்கள் இருவரும் ஒரு லாட்ஜில் இருப்பதை அறிந்த போலீசார் அங்கு சென்று இருவரையும் மீட்டனர்.
மேலும் சினிமா டைரக்டர் ஜாசிக் அலிக்கு உதவியதாக அவரது நண்பர் ஷம்னாராஜ் என்பவரையும் பிடித்தனர். இருவரையும் போக்சோ வழக்கில் கைது செய்த போலீசார் விசாரணைக்காக வடகரை போலீஸ்நிலையம் அழைத்து வந்தனர்.
அங்கு விசாரணைக்கு பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். மீட்கப்பட்ட 17 வயது சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.