கதம்பம்

வடிவேலுவின் அச்சாரம்

Published On 2022-09-12 11:08 GMT   |   Update On 2022-09-12 11:08 GMT
  • என் ராசாவின் மனசிலே படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அதில் ஒரு கேரக்டருக்கு ஆள் தேவைப்பட்டது.
  • ரொம்ப சின்ன கேரக்டர். ரெண்டே ரெண்டு சீன் மட்டும்தான்.

"அறைக்குள் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார் ராஜ்கிரண்.

ஒரு கல்யாணத்தில் கலந்து கொள்வதற்காக மதுரைக்கு வந்திருந்தார் அவர்.

காலையில் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்துவிட்டது. இனி இரவு ரெயிலில்தான் சென்னை திரும்ப வேண்டும்.

பகல் முழுவதும் தங்கியிருக்கும் ஹோட்டல் அறையில், தனிமையில் இருந்து கொண்டு என்ன செய்வது? நேரம் போகாமல் போர் அடித்தது.

அப்போதுதான் கல்யாணத்துக்கு அவரை மதுரைக்கு அழைத்திருந்த மாப்பிள்ளை இளங்கோ அங்கு வந்தார்.

"என்ன அண்ணே, ரொம்ப போர் அடிக்கிறதா?"

"ஆமா தம்பி."

"ராஜ்கிரண்அண்ணே... ஒண்ணு செய்யட்டுமா?"

"என்ன ?"

"என் ஃபிரண்டு ஒருத்தன் இருக்கான். நல்லா சிரிக்க சிரிக்க பேசுவான்."

"அப்படியா ?"

"ஆமாண்ணே. அவனை உடனே வரச் சொல்றேன். நீங்க அவன்கிட்ட பேசிக்கிட்டு இருங்க. அவன் பேச ஆரம்பிச்சா உங்களுக்கு நேரம் போறதே தெரியாது."

ஆச்சரியத்துடன் கேட்டார் ராஜ்கிரண். "அந்தப் பையன் பெயர் என்ன தம்பி ?"

"வடிவேலு."

அடுத்த ஒரு சில நிமிடங்களில்...

"வணக்கம்ணே."

வெள்ளந்தியாய் சிரித்தபடி வந்து நின்றார் வடிவேலு.

"என்னப்பா வேலை பண்றே ?"

வடிவேலு பேச ஆரம்பித்தார்.

ஃபோட்டோவுக்கு ஃபிரேம் போடும் ஒரு கடையில், தான் வேலை செய்வதைப் பற்றி... தன்னுடைய நண்பர்களை பற்றி... தெருவில் தாங்கள் செய்யும் சேட்டைகளை பற்றி... ஊருக்குள் நடக்கும் வேடிக்கைகளை பற்றி, நிறுத்தாமல் வடிவேலு பேசிக் கொண்டே இருக்க...

ராஜ்கிரணும் நிறுத்தாமல் சிரித்துக்கொண்டே இருந்தார். பொழுது போனதே தெரியவில்லை.

ரெயிலுக்கு நேரமாகவே ராஜ்கிரண் புறப்பட்டு விட்டார். வடிவேலுவும், தான் வேலை பார்க்கும் கடைக்கு கிளம்பி போய்விட்டார்.

இதை ஒரு பேட்டியில் சிரித்தபடியே சொன்னார் ராஜ்கிரண் அவர்கள். தொடர்ந்து அவர் சொன்னதுதான் ஆச்சரியமான விஷயம்.

"ஒரு விஷயம் சொல்லட்டுமா ?

அந்த சந்திப்பில் வடிவேலு என்னிடம் நடிக்க வாய்ப்பு கேட்கவே இல்லை. எனக்கும் வடிவேலுவை முதன்முதலாக பார்க்கும்போது அவரை சினிமாவில் நடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றவில்லை."

அப்புறம் எப்படி நடந்தது அந்த மேஜிக்?

அதை சுவாரசியமாகச் சொல்கிறார் ராஜ்கிரண்.

"என் ராசாவின் மனசிலே படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அதில் ஒரு கேரக்டருக்கு ஆள் தேவைப்பட்டது. ரொம்ப சின்ன கேரக்டர். ரெண்டே ரெண்டு சீன் மட்டும்தான்.

யாராவது ஒரு புது ஆளை நடிக்க வைக்கலாமான்னு யோசிச்சுகிட்டு இருந்தேன். அப்போதான் ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னால, மதுரையில நான் சந்திச்ச அந்தப் பையன் ஞாபகம் வந்தது. உடனே அவனை ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த திண்டுக்கல்லுக்கு புறப்பட்டு வரச் சொன்னேன்.

ஆரம்பத்துல இரண்டு சீன்ல மட்டும்தான் நடிக்க சொன்னேன். அதை நடிச்சு முடிச்சிட்டு நான் புறப்படறேண்ணேன்னு கிளம்பிட்டான்.

கொஞ்சம் இருன்னு சொல்லி, என் கூடவே இருக்க வச்சேன். ஏன்னா வடிவேலு நடித்த இரண்டு காட்சிகளிலேயும், நாங்கள் சொல்லிக் கொடுத்ததற்கு மேலாகவே சிறப்பாக நடித்திருந்தார்.

எனவே அந்தக் கேரக்டரை கொஞ்சம் கொஞ்சமாக டெவலப் செய்தோம். ஒரு பாட்டு காட்சியில் கூட அவரை நடிக்க வைத்தோம். அதுதான் "போடா போடா புண்ணாக்கு..."

இதை புன்னகையோடு அந்தப் பேட்டியில் சொன்னார் அண்ணன் ராஜ்கிரண்.

அதற்கு பின்பு கொஞ்சம் கொஞ்சமாக வடிவேலு தன்னை வளர்த்துக் கொண்டது ஒரு வரலாறு.

-ஜான்துரை ஆசிர் செல்லையா

Tags:    

Similar News

இலவசம்