உண்மை எது

பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் அதிருப்தி என செய்தி- நிதிஷ் குமார் சொல்வது என்ன?

Published On 2023-07-20 04:01 GMT   |   Update On 2023-07-20 04:01 GMT
  • பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் உள்பட 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
  • பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைப்பதே எனது முயற்சி.

பாட்னா:

அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்களின் முதல் ஆலேசானை கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த மாதம் நடந்தது.

அதை தொடர்ந்து, 2-வது கூட்டம் கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் உள்பட 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டம் முடிந்த பிறகு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். ஆனால் இதில் நிதிஷ் குமார் பங்கேற்கவில்லை.

இதுகுறித்து பேசிய பா.ஜ.க. தலைவர் சுஷில் மோடி, எதிர்க்கட்சிகள் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக தன்னை அறிவிக்காததால் நிதிஷ் குமார் அதிருப்தி அடைந்ததாகவும், அதனாலேயே அவர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்வில்லை எனவும் கூறினார்.

ஆனால் நிதிஷ் குமார் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுப்பற்றி அவர் கூறுகையில், "எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது, முடிவில் நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். உடனடியாக பாட்னாவுக்கு வர வேண்டியிருந்ததால், கூட்டத்துக்கு பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைப்பதே எனது முயற்சி. இப்போது அது வடிவம் பெற்றுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் பாஜக அழிந்துவிடும்" என கூறினார்.

Tags:    

Similar News