செய்திகள்
காங்கிரஸ் தலைவர்களை ஆர்.எஸ்.எஸ் திருடிக் கொண்டது - ப.சிதம்பரம் தாக்கு
வரலாற்றில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு ஒரு தலைவர் கூட கிடையாது, அதனால் காங்கிரஸ் தலைவர்களை ஆர்.எஸ்.எஸ் திருடிக் கொண்டது என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
சென்னை:
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு எதிரான கண்டனக் கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசியதாவது:-
சர்தார் வல்லபாய் படேல் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் அல்ல, படேல் காங்கிரஸ் தலைவர். வரலாற்றில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு ஒரு தலைவர் கூட கிடையாது. அதனால் காங்கிரஸ் தலைவர்களை ஆர்.எஸ்.எஸ் திருடிக் கொண்டது. காஷ்மீர் விவகாரத்தில் நேருவுக்கும் வல்லபாய் படேலுக்கும் ஒத்த கருத்தே இருந்தது. நேருவுக்கும் படேலுக்கும் ஒத்த கருத்து இல்லை என பாஜகவினர் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மக்களிடையே பிரதமர் உரையாற்றியபோது காஷ்மீருக்கு எந்தெந்த சட்டம் பொருந்தும் என கூறவில்லை.
எந்த மசோதாவையும் முழுமையாக படித்து பார்க்காமல் ஆதரவு அளிக்கிறது அதிமுக அரசு. தமிழகத்தை யூனியன் பிரதேசமாக மாற்றினால் கூட அதிமுக அரசு மவுனமாக இருக்கும். தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வந்து சேர,சோழ,பாண்டிய நாடு என பிரித்தால் மக்களின் நிலை என்ன?
காங்கிரசில் ஏற்பட்டுள்ள சலசலப்பையும், கலக்கத்தையும் நினைத்து நான் வருந்தாத நாள் இல்லை. மதசார்பின்மை பற்றி விவாதம் எழும்போது காங்கிரசில் சலசலப்பும், கலக்கமும் தற்போது இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.