செய்திகள்

ஒவ்வொரு தமிழன் தலையிலும் ரூ.1 லட்சம் கடன் உள்ளது - கமல்ஹாசன்

Published On 2019-04-05 11:36 IST   |   Update On 2019-04-05 11:36:00 IST
ஒவ்வொரு தமிழன் தலையிலும் ரூ.1 லட்சம் கடன் உள்ளது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார். #ParliamentElection #KamalHaasan #MakkalNeedhiMaiam

திண்டுக்கல்:

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து திண்டுக்கல்லில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் பங்கேற்று பேசியதாவது:-

தமிழக அரசியல் சூழலில் நானும் மக்களும் தாமாக விழித்து கொண்டுள்ளோம். ஆனாலும் தகுந்த நேரத்தில் விழித்துள்ளோம். மாற்றம் நம்மிடம் இருந்து தொடங்கி நாடு முழுவதும் ஏற்பட வேண்டும். பணத்துக்காக ஓட்டு போடாதீர்கள். ஒவ்வொரு தமிழன் தலை மீதும் ரூ.1 லட்சம் கடன் உள்ளது. இதை புரியாமல் ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் வாங்கி ஏமாந்து விடாதீர்கள்.

ஆட்சிப் பொறுப்பிலிருந்த கட்சிகள் திருடிய பணத்தில் இரண்டு தமிழகத்துக்கான வளர்ச்சி திட்டங்களை செய்திருக்க முடியும். நாட்டில் ஊழல் என்ற நோய் ஏற்கெனவே வந்து விட்டதால் அதனை முழுமையாக அகற்றியாக வேண்டும்.


பாராளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்கள் என தமிழகத்திலுள்ள 57 தெகுதிகளிலும் நானே போட்டியிடுவதாக நினைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும். ஆனால் ராகுல்காந்தி போன்று 2 தொகுதிகளில் போட்டியிட்டு மக்கள் வரிப்பணத்தை வீணாக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. அதிகாரமில்லாத வகையில் லோக் ஆயுக்தா சட்டத்தை இயற்றியுள்ளனர். அதனை வலிமையான அதிகார மையமாக உருவாக்க வேண்டும்.

அனைத்து இளைஞர்களும் பயன்பெறும் வகையில் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் வழங்க 500 பயிற்சி மையங்களை தொடங்குவோம்.

அரசியல் வைத்தியம் பார்ப்பதற்கு அதற்கான மருத்துவர்களால் மட்டுமே முடியும். அந்த தகுதியின் அடிப்படையிலேயே எங்களது கட்சியினருக்கு வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனால் நற்பணி மன்றத்தினர் யாரும் வருத்தப்படாமல் மகிழ்ச்சியோடு தேர்தல் பணியாற்ற வேண்டும். மாற்றம் வேண்டும், மனிதம் வேண்டுமென நினைப்பவர்கள், இந்த தேர்தலில் மின்கல விளக்கு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.  #ParliamentElection #KamalHaasan #MakkalNeedhiMaiam

Similar News