செய்திகள்

கம்பம் பகுதியில் ‘இரட்டை இலை’ சின்னத்துடன் சேலைகள் பறிமுதல்

Published On 2019-04-04 08:34 GMT   |   Update On 2019-04-04 08:34 GMT
கம்பம் அருகே வாக்காளர்களுக்கு வினியோகிக்க வைத்திருந்த இரட்டை இலை சின்னத்துடன் கூடிய சேலைகளை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #LokSabhaElections2019
கம்பம்:

தேனி பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையிலும், பண பட்டுவாடா குறித்த சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

கம்பம்-குமுளி சாலையில் அரசு ஆஸ்பத்திரிக்கு எதிரே உள்ள தனியார் ஆம்னி பஸ் அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக சேலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கம்பம் தொகுதி பறக்கும்படை தேர்தல் அலுவலர் சீமான், சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்திரன் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர்.

சோதனையில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்ட சுமார் ஆயிரம் பச்சை நிற சேலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவை எங்கிருந்து வந்தது என ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

திருப்பூரில் உள்ள தனியார் டெக்ஸ்டைலில் இருந்து 11 பண்டல்களில் ஆயிரம்சேலைகள் கம்பத்தில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் நிறுனத்துக்கு வந்ததாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

மேலும் அதற்கான ஆவணங்களையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அந்த சேலைகளை உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சேலைகளின் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும். #LokSabhaElections2019

Tags:    

Similar News