செய்திகள்

தேர்தல் பறக்கும் படையால் இதுவரை 3.39 கோடி பணம் பறிமுதல்- தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி

Published On 2019-03-14 07:13 GMT   |   Update On 2019-03-14 09:18 GMT
தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினால் இதுவரை 3.39 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார். #ParliamentElection #TNCEO
சென்னை:

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ, தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாராளுமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பாக அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளன. தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக பொதுமக்கள் 94454 67707 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் அனுப்பலாம். மேலும், 1800-4256-669 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு புகாரை தெரிவிக்கலாம்.

சந்தேகப்படும்படியான பணப்புழக்கம் குறித்து உரிய நடவடிக்கை  எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணம் இல்லாமல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும். அதேசமயம், ரூ.10 லட்சத்துக்கு மேல் உரிய ஆவணத்துடன் கொண்டு சென்றால், வருமான வரித்துறையிடம் தகவல் தெரிவிக்கப்படும்.

தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படைஇதுவரை நடத்திய சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3.39 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  வணிகர்கள் பாதிக்கப்படாத வகையில் சோதனை நடைமுறைகள் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். #ParliamentElection #TNCEO
Tags:    

Similar News