செய்திகள்

ஆட்சி அதிகாரத்தில் இல்லாத காங்கிரசுக்கு 10 இடங்கள் கொடுத்த திமுகதான் அடிமை- ஆர்பி உதயகுமார் பேச்சு

Published On 2019-03-04 11:38 IST   |   Update On 2019-03-04 11:38:00 IST
நாட்டில் ஒவ்வொரு மாநிலங்களிலும் அதிகாரத்தை இழந்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் கொடுத்த திமுக தான் அடிமை என்று அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேசியுள்ளார். #ministerudayakumar #admk #dmk #congress
தேனி:

தேனி அருகே ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பேசியதாவது:-

ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.ப.ரவீந்திரநாத்குமார் வருகிற பாராளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் களம் காண்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் 39 தொகுதியில் அவர் எங்கு போட்டியிட்டாலும் அவருக்கு வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். விருதுநகர் தொகுதிக்கு அவரை வரவேற்க தயாராக உள்ளோம். 

விருதுநகரில் அவர் களம் கண்டால் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைப்பார். இன்றைக்கு அ.தி.மு.க.வை அடிமை கட்சி என்று பலர் கூறுகிறார்கள். 

நாட்டில் ஒவ்வொரு மாநிலங்களிலும் அதிகாரத்தை இழந்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. 10 தொகுதிகளை ஒதுக்கி உள்ளது. ஆனால், நாட்டை ஆட்சி செய்து கொண்டு இருக்கும் பா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க. கூட்டணியில் 5 இடங்கள் ஒதுக்கீடு செய்துள்ளோம். 5 இடம் ஒதுக்கியவர்கள் அடிமையா? 10 இடங்கள் வழங்கியவர்கள் அடிமையா? என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். 
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திடம் ஓ.பன்னீர்செல்வம் கூட்டணி தொடர்பாக 5 முறை பேசியுள்ளார். விரைவில் தே.மு.தி.க. எங்களின் வெற்றிக் கூட்டணியில் இணையும்.

இவ்வாறு அவர் பேசினார்.  #ministerudayakumar #admk #dmk #congress 

Similar News