உள்ளூர் செய்திகள்

இளம்பெண் பலாத்காரம்- சிறை வார்டர்கள் 2 பேர் கைது

Published On 2023-01-13 03:02 GMT   |   Update On 2023-01-13 05:49 GMT
  • சிறையின் அருகில் உள்ள சாலையோரம் 20 வயதுடைய இளம்பெண் நின்று கொண்டிருந்தார்.
  • சேலம் சிறையில் வார்டர்களாக பணியாற்றும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்:

சேலம் தென் அழகாபுரத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவரை சேலம் மத்திய சிறையில் வார்டனாக பணியாற்றும் திருப்பத்தூர் அருகே உள்ள நரியனேரி கரியம்பட்டி பகுதியை சேர்ந்த அருண் (வயது 30) மற்றும் சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள உத்தமசோழபுரம் பகுதியைச் சேர்ந்த சிவசங்கர் (31) ஆகியோர் அஸ்தம்பட்டியில் உள்ள மத்திய சிறை காவலர்கள் குடியிருப்புக்கு அழைத்து சென்று அங்கு காலியாக உள்ள வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தனர்.

மேலும் இதை வீடியோ, போட்டோ எடுத்து, அதை வைத்து மிரட்டி தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் 20-ந்தேதி முதல் கடந்த ஜனவரி மாதம் 4-ந்தேதி வரை பலமுறை இதுபோல் நடந்து கொண்டனர்.

இதுபற்றி அந்த பெண், அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி சிறை வார்டன்கள் அருண், சிவ சங்கர் ஆகிய இருவரையும் மருத்துவ பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

கைதான அருண், சிவசங்கர் ஆகியோர் உடனடியாக சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இருவரும் அரசு ஊழியர்கள் என்பதால், கைது செய்யப்பட்ட விவரம் குறித்து, சேலம் மத்திய சிறை நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்துக்கும், அரசுக்கும் தகவல் தெரிவித்துள்ளது. கைதான இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கான அறிக்கையை சேலம் சிறை துறை சூப்பிரண்டு தமிழ் செல்வன் தயாரித்து கோவை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி சண்முகசுந்தரத்துக்கு அனுப்பி உள்ளார்.

டி.ஐ.ஜி., சிறைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருவரையும் சஸ்பெண்டு செய்ய உள்ளார். இன்று மாலைக்குள் இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என சிறை துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News