கிணற்றில் விழுந்த நாய் குட்டியை காப்பாற்ற முயன்ற தொழிலாளி உயிரிழப்பு
- வீட்டின் அருகே உள்ள பாழடைந்த கிணற்றின் அருகே நாய் குட்டி ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது.
- கிணற்றில் எதிர்பாராத விதமாக நாய்குட்டி தவறி விழுந்து விட்டது.
வேலூர்:
காட்பாடி ஜாப்ராபேட்டை ஜி.என்.நகர் மணவாளமோடு பகுதியை சேர்ந்தவர். குமரேசன் என்கிற வல்லரசு (வயது 45). கூலி தொழிலாளி. இவருக்கு ரேவதி என்ற மனைவி 3 மகன்கள் உள்ளனர். இவருடைய வீட்டின் அருகே உள்ள பாழடைந்த கிணற்றின் அருகே நாய் குட்டி ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது.
அப்போது கிணற்றில் எதிர்பாராத விதமாக நாய்குட்டி தவறி விழுந்து விட்டது.
அதனை பார்த்த குமரேசன் கயிறு மூலம் வாளியை கட்டி நாய் குட்டியை காப்பாற்ற முயற்சி செய்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கிணற்றில் விழுந்து விட்டார். அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி இறந்தார்.
இதுகுறித்து விருதம்பட்டு போலீசாருக்கும், காட்பாடி தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் விழுந்து பலியான குமரேசன் உடலை மீட்கும் பணியில் நேற்று முன்தினம் முழுவதும் ஈடுபட்டனர். இருப்பினும் உடலை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதற்கிடையில் நேற்று பாதாளசங்கலியை கொண்டு வந்து குமரேசன் உடலை தேடினர். இருந்தும் கிடைக்காததால் கிணற்று நீரை மோட்டார் மூலம் வெளியேற்றி பிணத்தை மீட்டனர். பிணத்தை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து விருதம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.