உள்ளூர் செய்திகள்

நிலத் தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை?

Published On 2022-07-02 12:06 GMT   |   Update On 2022-07-02 12:06 GMT
  • வீராணம் அருகே நிலத் தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை? தம்பியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  • இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

சேலம்:

சேலம் வீராணம் அருகே உள்ள வேடப்பட்டி காளியம்மன் கோவில்காடு பகுதியைச் சேர்ந்தவர் அம்மாசி (வயது 70) இவருக்கு கமலா (63) என்ற மனைவியும் லோகநாதன் (47) என்ற மகனும் உள்ளனர். மேலும் அம்மாசிக்கு தனம் ( 61) என்ற இன்னொரு மனைவியும், அவர் மூலமாக வெங்கடாஜலபதி (45) என்ற மகனும் பானுமதி (42) என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் அம்மாசிக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை லோகநாதன் மற்றும் வெங்கடாசலபதிக்கு சரிபாதியாக பிரித்து கொடுத்துள்ளனர். இது தொடர்பாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 26-ந்தேதி அண்ணன், தம்பி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அருகிலிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இதனிடையே நேற்று இரவு வீட்டில் இருந்த லோகநாதன் திடீரென நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார். உறவினர்கள் உடனடியாக அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த லோகநாதன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். வெங்கடாசலம் தாக்கியதால் தான் தற்போது லோகநாதன் இறந்து விட்டதாக உறவினர்கள் வீராணம் போலீசாரிடம் கூறினர்.

இதனைத் தொடர்ந்து இன்று லோகநாதன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது அதன் முடிவிலேயே லோகநாதன் எப்படி இறந்தார்? என்பது தெரிய வரும்.

இது தொடர்பாக போலீசார் வெங்கடாசலம் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News