உள்ளூர் செய்திகள்

கடலூர் குப்பன்குளத்தில் துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி

கடலூர் குப்பன்குளத்தில் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பெண் தீக்குளிக்க முயற்சி: துணை மேயர் தலைமையில் தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

Published On 2022-12-21 09:22 GMT   |   Update On 2022-12-21 09:22 GMT
  • அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு ஜேசிபி வாகனத்துடன் வீடுகளை இடிக்க சென்றனர் .
  • துணை மேயர் தாமரைசெல்வன் மற்றும் போலீசார் மண்எண்ணை கேனை பிடுங்கினர்.

கடலூர்:

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பன் குளம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் 7 வீடுகள் கட்டப்பட்டு இருப்பதாக ஒரு சிலர் மாநகராட்சிக்கு புகார் அளித்தனர்.  மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்‌. இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் உத்தரவின் பேரில் நகரமைப்பு அலுவலர் முரளி மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு ஜேசிபி வாகனத்துடன் வீடுகளை இடிக்க சென்றனர் . அப்போது அங்கு பொதுமக்கள் திரண்டனர். பின்னர் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இத்தகவல் அறிந்த கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், அ.தி.மு.க கவுன்சிலர் தஷ்ணா, நிர்வாகி நாகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குளோப் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் அதிகாரியிடம் பேசுகையில், இந்த பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி இருப்பதாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது மேலும் இவர்கள் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கப்பட உள்ளது ஆகையால் வீடுகள் இடிப்பதற்கு மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும். இந்த பகுதியில் ஒரு சில கட்டிடங்கள் அரசு இடங்களை ஆக்கிரமித்து பெரிய அளவில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அதனையும் உரிய முறையில் அளவீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இது தொடர்பாக ஆணையாளர் நேரில் வந்து மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது துணை மேயர் தாமரைச்செல்வன், கவுன்சிலர் தஷ்ணா மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் இதற்கு ஆதரவாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே பாதிக்கப்பட்ட பெண் எழில் என்பவர் திடீர் என மண்எண்ணை கேனுடன் வந்தார். அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் தனது உடலில் மண் எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே துணை மேயர் தாமரைசெல்வன் மற்றும் போலீசார் மண்எண்ணை கேனை பிடுங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக தொடர்ந்து அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

Similar News