உள்ளூர் செய்திகள்

புதிய தொழில் முனைவோருக்கு மானியத்துடன் ரூ.75 லட்சம் கடன் உதவி

Published On 2022-07-09 08:59 GMT   |   Update On 2022-07-09 08:59 GMT
  • புதிய தொழில் முனைவோருக்கு மானியத்துடன் ரூ.75 லட்சம் கடன் உதவி வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
  • இது தொடர்பாக மேலும் விபரங்களுக்கு விருதுநகர் மாவட்ட தொழில் மையபொது மேலாளரை 8925534036 என்ற செல்போன் எண்ணில் அணுகலாம்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்படவும், முதல் தலைமுறை தொழில் முனைவோர் நிறுவனங்களைத் தொடங்க "புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் (பிளஸ்-2 தேர்ச்சி) மற்றும் பட்டய தொழிற்கல்வி தேர்ச்சி பெற்ற முதல் தலைமுறை தொழில் முனைவோர் சுயமாக தொழில் தொடங்க வசதி செய்யப்பட்டுள்ளது.

வயது வரம்பு பொது பிரிவினருக்கு 21-க்கு மேல் 35-க்குள் இருக்க வேண்டும். சிறப்பு பிரிவினர்களான மகளிர், ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது 45 ஆகும். இந்த திட்டத்திற்கு ஆண்டு வருமானம் உச்ச வரம்பு ஏதுமில்லை.

அனைத்து உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் தொடங்க இந்த திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.5 கோடி வரை கடன் பெற்று 25 சதவீத அதிகபட்ச மானியம் ரூ.75 லட்சம் வரை வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த திட்டத்தின் கீழ் பட்டியல் இனம், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளி தொழில் முனைவோருக்கு கூடுதலாக 10 சதவீத மானியம் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் அரிசி ஆலை, மர இழைப்பகம், மாவு மில், மிளகாய் எண்ணெய் அரைக்கும் ஆலை, லேத் எந்திரம், அட்டைபெட்டி தயாரித்தல், பிரிண்டிங் எந்திரங்கள், பேப்பர் போர்ட், பேண்டேஜ் கிளாத், நடமாடும் உணவகம், கடலைமிட்டாய் தயாரித்தல், கால்நடை தீவனம் தயாரித்தல், பவர் லாண்டரி, ஸ்கேன் சென்டர், பிஸியோதெரபி கிளினிக், ஹாலோபிளாக் மற்றும் பிளை ஆஷ் பிரிக்ஸ், ஜிம் சென்டர் (ஆண்-பெண்), ஆயத்த ஆடைகள் தயாரிப்பு, ஸ்டீல் கட்டில் பீரோ மற்றும் சேவை சார்ந்த தொழில்களும் தொடங்கலாம்.

ஆன்லையனில் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியின் அடிப்படையில் வங்கிக்கு பரிந்துரைக்கப்படும்.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோர் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இது தொடர்பாக மேலும் விபரங்களுக்கு விருதுநகர் மாவட்ட தொழில் மையபொது மேலாளரை 8925534036 என்ற செல்போன் எண்ணில் அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News