பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்தால் நடவடிக்கை
- மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை அலுவலர்கள் இது குறித்து தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள செம்பட்டி கிராமத்தில் மழையால் சாலை சேதமடைந்து பள்ளமாகி தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சி அளித்தது.
அந்த பாதையில் பள்ளி மாணவர்கள் அரசு பஸ்சில் ஆபத்தான முறையில் படிக்கட்டில் பயணம் செய்யும் செய்தி மாலை மலரில் நேற்று வெளியானது. இது குறித்து மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, பஸ் படிக்கட்டில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தாலோ, விதி முறைகள் மீறினாலோ மாணவர்கள் மீதும், தொடர்புடைய வாகன ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மீதும் மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது கல்வித் துறை மற்றும் காவல் துறையின் மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை ஆகிய அலுவலர்கள் இது குறித்து தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கலெக்டர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.