உள்ளூர் செய்திகள்

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

சுவரொட்டி கிழிப்பு, மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் மறியல்

Published On 2023-01-01 13:04 IST   |   Update On 2023-01-01 13:04:00 IST
  • சுவரொட்டி கிழிப்பு, மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் மறியல் செய்தனர்.
  • சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை அருகே தொப்பலாக்கரை கிராமம் உள்ளது. வருகிற 3-ந்தேதி நடைபெற உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் ஜெயந்தி விழாவையொட்டி அந்த கிராமத்தில் பல பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

மர்ம நபர்கள் அந்த பகுதியில் ஒட்டி இருந்த சுவரொட்டியை கிழித்தும், அதே பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் என்பவரின் மோட்டார் சைக்கிளை எரித்தும் தப்பி சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த அந்த கிராம மக்கள் மர்ம நபர்களை கைது செய்யக்கோரி பரளச்சி விலக்கு என்ற இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இந்த பகுதி வழியாக செல்ல வேண்டிய பஸ்கள், வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். அந்த பகுதி முழுவதும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்த விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

மர்ம நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று அவர் உறுதி அளித்ததை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News