உள்ளூர் செய்திகள்
குடிநீர் வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
- மேலசெம்மங்குடி கிராமத்தில் ஒரு வாரமாக குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து பெண்கள் சாலையில் அமர்ந்து காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- தண்ணீர் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
மெலட்டூர்:
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், மேலசெம்மங்குடி கிராமத்தை சேர்ந்த கிராமவாசிகளுக்கு ஒரு வார காலமாக குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து மேலசெம்மங்குடி கிராமத்தை சேர்ந்த பெண்கள் சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாபநாசம் சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் மற்றும் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கிராம மக்களுக்கு தண்ணீர் கிடைக்க உடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் பாபநாசம்- சாலியமங்கலம் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.