ஆட்டோ கட்டணத்தை உயர்த்த கோரி ஆர்ப்பாட்டம்
- ஆட்டோக்களுக்கு எப்சி புதுப்பிக்க ரூ.10,000 தமிழக அரசு வழங்க வேண்டும்
- அரசு வீடு திட்டத்தில் முன்னுரிமை தந்து ஒதுக்க வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாவட்ட தலைவர் தனசேகர் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.
பொருளாளர் சம்பத் வரவேற்பு உரையாற்றினார்.இந்து ஆட்டோ முன்னணி மாநில பொதுச் செயலாளர் மகேஷ் கண்டன உரையாற்றினார். ஆட்டோ மீட்டர் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் பெட்ரோல் டீசல் கியாஸ் வரியை மத்திய, மாநில அரசுகள் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு அரசு வீடு திட்டத்தில் முன்னுரிமை தந்து ஒதுக்க வேண்டும்.
ஆந்திர மாநிலத்தில் உள்ளது போல் ஆட்டோக்களுக்கு எப்சி புதுப்பிக்க ரூ.10,000 வழங்குவது போல் தமிழக அரசும் வழங்க வேண்டும் தமிழ்நாடு முழுவதும் ஆட்டோ தொழிலாளர் நல வாரியத்தில் ஆன்லைன் பதிவு மிகவும் சிரமப்பட்டு பதிய வேண்டியிருக்கிறது.
எனவே ஆன்லைன் பதிவினை எளிதாக பதிய ஆவணம் செய்ய வேண்டும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் போக்குவரத்து விதி மீறல் செய்தால் ஆட்டோவை நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்து ஆட்டோ டிரைவர் கையெழுத்துடன் அபராதம் விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கோட்ட பொருளாளர் பாஸ்கரன், மாநில செயலாளர் இந்து வழக்கறிஞர் முன்னணி ரத்தின குமார், இந்து ஆட்டோ முன்னணி மாநில பொருளாளர் மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.