உள்ளூர் செய்திகள்

விழாவில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ,வுக்கு மேயர் சண்.ராமநாதன் மாலை அணிவித்தார்.

கழகம் காத்த மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கிய உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.

Published On 2022-06-27 15:13 IST   |   Update On 2022-06-27 15:13:00 IST
  • தஞ்சையில் கட்சி கொடியேற்று விழா, கலைஞர் அறிவாலயத்தில் திராவிட இயக்க தலைவர்கள் படத்திறப்பு விழா, கழகம் காத்த மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிளி வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
  • கழகம் காத்த வேங்கைராயன்குடிகாட்டைச் சேர்ந்த குழந்தைவேலு உள்பட மூத்த முன்னோடிகள் 600 பேருக்கு பொற்கிழி வழங்கி சிறப்புரையாற்றினார்.

தஞ்சாவூர்:

முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இன்று தஞ்சையில் கட்சி கொடியேற்று விழா, கலைஞர் அறிவாலயத்தில் திராவிட இயக்கத் தலைவர்கள் படத்திறப்பு விழா, கழகம் காத்த மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிளி வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார்.

மத்திய மாவட்ட பொறுப்பாளர் துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ , தலைமை தாங்கினார். டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ., மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும் மாநகராட்சி மேயருமான சண்.ராமநாதன் ஆகியோர் அனைவரையும் வரவேற்று பேசினர்.

நிகழ்ச்சியில் 80 அடி உயர பிரம்மாண்ட கம்பத்தில் தி.மு.க. கொடியை இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ, ஏற்றி வைத்தார். பின்னர் கலைஞர் அறிவாலயத்தில் திராவிட இயக்கத் தலைவர்களான பெரியார், அண்ணா, கருணாநிதி, டாக்டர் நடசேனார், டி.எம்.நாயர், பி.டி. தியாகராயர், பனகல் அரசர், ஏ.டி. பன்னீர்செல்வம் ஆகியோரின் படங்களை திறந்து வைத்தார். இதையடுத்து கழகம் காத்த வேங்கைராயன்கு டிகாட்டைச் சேர்ந்த குழந்தைவேலு உள்பட மூத்த முன்னோடிகள் 600 பேருக்கு பொற்கிழி வழங்கி சிறப்புரையாற்றினார்.

இதனை தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் புதிய ரோடு ஸ்வீப்பிங் எந்திர பணிகளை மேயர் சண். ராமநாதன், ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி, தலைமை கொறடா கோவி செழியன், கல்யாணசுந்தரம் எம்.பி, மாநில வர்த்தக அணி தலைவர் உபயதுல்லா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணை மேயர் அஞ்சுகம் பூபதி, திருமலைசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேஷ், ஒன்றிய செயலாளர்கள் அருளானந்தசாமி, முரசொலி, செல்வகுமார், உலகநாதன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் செல்வம், தலைமைக்கழக நிர்வாகி இறைவன், மாவட்ட நிர்வாகிகள் எல்.ஜி. அண்ணா, புண்ணியமூர்த்தி, தலைமை கழக பேச்சாளர் வரகூர் காமராஜ், கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வுக்கு தஞ்சை நகரின் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News