உள்ளூர் செய்திகள்

திருச்சியில் மீன் வியாபாரி கொலை-கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு

Published On 2023-10-30 09:22 GMT   |   Update On 2023-10-30 09:22 GMT
  • 2 மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த 4 பேர் திடீரென ராமராஜை ஓட, ஓட விரட்டி வெட்டி கொலை செய்தனர்.
  • தனிப்படை போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருச்சி

பெரம்பலூர் மாவட்டம் பழைய பஸ் நிலையம் அருகே திருநகரை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருடைய மகன் ராமராஜ் (வயது 26). மீன் வியாபாரியான இவர் திருச்சி உறையூர் காசிவிளங்கி மீன் மார்க்கெட்டில் வாரந்தோறும் மீன் வாங்க வருவது வழக்கம். அந்த வகையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் தனது மீன் கடையில் வேலை பார்க்கும் 3 பேருடன் காரில் பெரம்பலூரில் இருந்து திருச்சிக்கு வந்தார்.

உறையூர் காசி விளங்கி மீன் மார்க்கெட்டுக்கு சென்று மீன் வாங்கிக்கொண்டு, அவற்றை காரில் ஏற்ற வந்தபோது, அதிகாலை 4.15 மணியளவில் 2 மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த 4 பேர் திடீரென ராமராஜை ஓட, ஓட விரட்டி வெட்டி கொலை செய்தனர்.

இது பற்றி தகவல் அறிந்த உறையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

ராமராஜ் மீது பெரம்பலூர் மாவட்டம் டவுன் போலீஸ் நிலையத்தில் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ந் தேதி பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே செங்குட்டுவேல் என்பவரை கொலை செய்ததாக வழக்கு உள்ளது.

செங்குட்டுவேலின் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் விதமாக அவரது உறவினர்கள் மற்றும் கூட்டாளிகள் சேர்ந்து ராமராஜை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் காமினி சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த கொலையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய 4 தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

ராமராஜை கொலை செய்ய வந்த நபர்கள் அவர் மீன் மார்க்கெட்டில் மீன் வாங்கியபோது, அவரை கண்காணித்து, மார்க்கெட்டில் இருந்து வெளியே வரும் வரை காத்திருந்து கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து மீன் மார்க்கெட் கடைகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும், இந்த கொலை வழக்கில் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் பெரம்பலூருக்கு விரைந்தனர். அங்கு போலீசார் முகாமிட்டு விசாரணையை துரிதபடுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News