உள்ளூர் செய்திகள்

இளம்பெண் திடீர் சாவு

Published On 2023-05-07 09:27 GMT   |   Update On 2023-05-07 09:27 GMT
  • சகோதரி கீழ்கொடுங்காலூர் போலீசில் புகார்
  • போலீசார் விசாரணை

வந்தவாசி:

வந்தவாசி அடுத்த கொவளை கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி அம்மு (வயது32) இருவருக்கும் கடந்த 13 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்தது. 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு கிராமத்தில் திருவிழா நடந்தது. திருவிழாவில் தெருக்கூத்து நாடகம் நடந்தது.

இதனை அம்மு அவரது கணவர் செந்தில் இருவரும் பார்த்துவிட்டு அதிகாலை வீட்டிற்கு வந்து தூங்கினர். காலை 9 மணி அளவில் செந்தில் மாட்டுக்கு தண்ணீர் காட்ட தனது மனைவியை எழுப்பி உள்ளார்.

அப்போது அசதியாக உள்ளதாகவும் நீங்களே மாட்டிற்கு தண்ணீர் காட்ட வேண்டும் என கூறியதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து மாட்டிற்கு தண்ணீர் வைத்து விட்டு பின்னர் விவசாய வேலைக்கு செந்தில் சென்று விட்டார்.

பிற்பகல் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அம்மு படுக்கையில் இருந்து எழவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த செந்தில் மனைவியை எழுப்பி பார்த்தபோது கண் விழிக்கவில்லை. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் அம்மு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். சம்பவம் குறித்து அம்முவின் சகோதரி லட்சுமி (34) கீழ்கொடுங்காலூர் போலீசில் இன்று புகார் செய்தார்.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News