உள்ளூர் செய்திகள்

வேடந்தவாடி ஏரியில் குவியும் வெளிநாட்டு பறவைகள்

Published On 2023-03-11 14:11 IST   |   Update On 2023-03-11 14:11:00 IST
  • கிராம மக்கள் மகிழ்ச்சி
  • 3 மாதங்களுக்கு பிறகு திரும்பி சென்றுவிடும் என்கின்றனர்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம், வேடந்தவாடி கிராமத்தில் பறவைகள் குவிந்து வருவதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இயற்கையான சூழல், தட்பவெப்ப நிலை, உணவு உள்ளிட்ட காலநிலைக்கு ஏற்ப ஏதுவாக இருக்கும் இடங்களை தேடி பல்வேறு நாடுகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பறவைகள் வருகை தொடர்கிறது.

இதன்மூலம் பறவைகளின் இனப்பெருக்கம் நிகழ்கிறது. பறவைகள் சரணாலயம் என்றால் வேடந்தாங்கல் என கூறப்பட்டு வந்த நிலையில், திருவண்ணாமலை அடுத்த மங்கலம் அருகே வேடந்தவாடி கிராமமும் வேடந்தாங்கலாக உருவெடுத்துள்ளது.

இந்த கிராமத்தில் 140 ஏக்கர் பரப்பளவில் உள்ள பெரிய ஏரியில் நீர் நிரம்பியுள்ளது. ஏரியின் நடுவே மரங்கள் உள்ளன. இயற்கையான சூழல் இருப்பதால் கடந்த சில வாரங்களாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்துபறவைகளின் வருகை அதிகரித்துள்ளன.

கூட்டம், கூட்டமாக வரும் பறவைகளை, கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது, எங்கள் கிராமத்துக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து நீர்காகம், அரிவாள் மூக்கன், கூழைக்கடா, நீர் மத்தி, நாரை என 10 - க்கும் மேற்பட்ட வகைகளைச் சேர்ந்த பறவைகள் வந்துள்ளன. பறவைகள் கூட்டமாக கூடுவதற்கு ஏற்ற கிராமமாக, எங்கள் கிராமம் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

எங்கள் கிராமத்தில் நிலவும் தட்ப வெப்ப நிலையானது பறவைகளை கவர்ந்துள்ளன. இனப்பெருக்கத்துக்காக பறவைகள் வருவது மகிழ்ச்சியாக உள்ளன. 3 மாதங்களுக்கு பிறகு திரும்பி சென்றுவிடும் என்கின்றனர்.

காலையில் இரை தேடி செல்லும் பறவைகள், மாலையில் திரும்பி விடுகிறது. பறவைகள் வருவது, இதுவே முதன்முறை. பறவைகள் எழுப்பும் ஒசையை கேட்கும்போது, மனதிற்கு மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் உள்ளது என்றனர். பறவைகளை காண சுற்றுப் புற பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் வந்து செல்கின்றனர் என்றனர்.

Tags:    

Similar News