உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 2.19 லட்சம் பேருக்கு சிகிச்சை

Published On 2023-05-01 06:54 GMT   |   Update On 2023-05-01 06:54 GMT
  • ஆகஸ்டு மாதம் மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டது.
  • திருப்பூர் மாவட்டத்தில் 26 லட்சத்து 43 ஆயிரத்து 577 பேர் இருப்பதாக கணக்கிட்டு 20 லட்சத்து 3,831 பரிசோதனை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

திருப்பூர்:

கடந்த 2021 ஆகஸ்டு மாதம் மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்கென திருப்பூர் மாவட்டத்தில் 13 மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது.குழுவை சேர்ந்த மகளிர், சுகாதார தன்னார்வலர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று மருந்து, மாத்திரை வழங்கி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் 26 லட்சத்து 43 ஆயிரத்து 577 பேர் இருப்பதாக கணக்கிட்டு 20 லட்சத்து 3,831 பரிசோதனை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

நடப்பாண்டு ஏப்ரல் 20ந்தேதி நிலவரப்படி 19 லட்சத்து 72 ஆயிரத்து 656 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 53 ஆயிரத்து 650 பேருக்கு நீரிழிவு நோய் இருப்பதும் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 211 பேருக்கு உயர்ரத்த அழுத்தம் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. 40 ஆயிரத்து 847 பேருக்கு மேற்கண்ட இரண்டு பாதிப்புகளும் உள்ளது.

வீட்டில் தங்கியுள்ள இடத்தில் இருந்து எழுந்து வர முடியாத நிலையில் 7,821 பேருக்கு மருந்து, மாத்திரை தொடர்ந்து வழங்கப்படுகிறது. 9,947 இயன்முறை மருத்துவம் பார்க்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் துவங்கிய இரண்டு ஆண்டுகளில் இரண்டு லட்சத்து 19 ஆயிரத்து 478 பேர் பயன் பெற்றுள்ளனர்.

இது குறித்து திருப்பூர் மாவட்ட சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறுகையில், வயதானவர், பொருளாதார நிலையில் மேம்பாடு அடைய வழியில்லாமல் உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை மேற்கொள்ள வேண்டியசிரமத்தில் உள்ளவர்களுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தங்கள் பகுதியில் உள்ள கிராம சுகாதார செவிலியர் அல்லது நகர்ப்புற நல மையத்தை அணுகிதிட்டம் குறித்த விவரங்களை மக்கள் அறிந்து கொள்ளலாம் என்றார்.

Tags:    

Similar News