உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

ஆடுகள் வரத்து குறைவால் விலை உயர்வு

Published On 2023-06-25 06:02 GMT   |   Update On 2023-06-25 06:02 GMT
  • வியாபாரிகள் வந்து ஆடுகளை வாங்கி செல்கின்றனர்.
  • ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

 மூலனூர்  :

தமிழகத்தில் நடைபெறும் பெரிய ஆட்டு சந்தைகளில் கன்னிவாடி ஆட்டுச்சந்தையும் ஒன்று. இந்த சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு கோவை, பொள்ளாச்சி, உடுமலை, மதுரை, திருச்சி, சென்னை போன்ற தமிழகத்தின் பெருநகரங்கள் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் வந்து ஆடுகளை வாங்கி செல்கின்றனர்.

அதேபோல் கன்னிவாடி மற்றும் மூலனூர், வெள்ளகோவில், பரமத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இப்பகுதியில் நல்ல மழை பெய்துள்ளதால் ஆடுகளுக்கு நல்ல தீனி இருப்பதால் விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்க முன்வருவதில்லை.

இதனால் கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு கடந்த மூன்று வாரங்களாக ஆடுகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி விவசாயி ஒருவர் கூறுகையில், தற்போது கன்னிவாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கிணறுகளில் போதிய அளவு தண்ணீர் உள்ளதால் கால்நடைகளுக்கு தேவையான தீனிகள் போதிய அளவில் இருப்பதால் விவசாயிகள் ஆடுகள் வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் .

இதன் காரணமாக ஆடுகளை விற்க விவசாயிகளிடம் ஆர்வம் இல்லாததால் கன்னிவாடி ஆட்டுச்சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்துள்ளது. இந்த சந்தையில் ஆடுகளின் விலை அதன் எடையை பொறுத்தே நிர்ணயிக்கப்படும். அதன் அடிப்படையில் கடந்த வாரத்தில் ஒரு கிலோ ரூ.650-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரத்தில் ரூ.100 அதிகரித்து ரூ.750-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் 10 கிலோ எடை கொண்ட ஆடு சுமார் ரூ.7,500-க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்த வாரம் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தன.

Tags:    

Similar News