பல்லடம் முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா
- 6-வது நாளான சஷ்டி அன்று முருகன் திருக்கோவில்களில் சூரசம்ஹாரவிழா நடைபெறும்.
- திருக்கல்யாண உற்சவமும், திருமண விருந்து நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பல்லடம்:
பல்லடத்தில் உள்ள தண்டாயுதபாணி திருக்கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில், உள்ளிட்ட முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா கடந்த 25-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. வருடம்தோறும் ஐப்பசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாளான வளர்பிறை முதல் சஷ்டி வரை 6 நாட்கள் கந்த சஷ்டி விரதம் மேற்கொள்வர்கள். 6-வது நாளான சஷ்டி அன்று முருகன் திருக்கோவில்களில் சூரசம்ஹாரவிழா நடைபெறும்.
இதன்படி நேற்று பல்லடத்தில் உள்ள தண்டாயுதபாணி கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில், உள்ளிட்ட முருகன் கோவில்களில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமிக்கு, யாகபூஜைகளும், சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து அன்னை பார்வதியிடம் சக்திவேல் பெறும் வரலாற்று நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் வேலாயுதத்துடன் போர்க்களம் புகும் முருகப்பெருமான், அசுரர்களை வதம் செய்து, சூரபத்மனை சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னிடம் சேர்த்து கொண்டு, ஜெயந்திநாதராக கோவில் திரும்பினார்.பின்னர் சாமிக்கு 16 வகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. மலர், மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு,தீபாராதனை நடைபெற்றது இதன் பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு நேற்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டனர். சூரசம்ஹாரத்தை முன்னிட்டு முருகன் கோவில்களில் பல்லடம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று திருக்கல்யாண உற்சவமும், திருமண விருந்து நிகழ்ச்சியும் நடைபெற்றது.