உள்ளூர் செய்திகள்

பயிர் காப்பீடு திட்ட விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் தொடங்கி வைத்த காட்சி. 

திருப்பூரில் பயிர் காப்பீடு திட்ட விழிப்புணர்வு வாகன பிரசாரம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2023-11-04 06:55 GMT   |   Update On 2023-11-04 06:55 GMT
  • மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரவி, வேளாண்மை அலுவலர் சீதா மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
  • திருப்பூர் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்ட வாகனத்தை கொடியசைத்து, மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (வேளாண்மை) மாரியப்பன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணவேணி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரவி, வேளாண்மை அலுவலர் சீதா மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர், விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டப்பணிகளை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். வேளாண் உற்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற அனைத்து திட்டங்களையும் விவசாயிகளுக்கு முழுமையாக கொண்டு சேர்த்திட மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பை அதிகரிக்கவும், பயிர் காப்பீடு மூலம் விவசாயிகளுக்கு அதிக அளவிலான பயனை உறுதி செய்யும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த பிரசார வாகனம் முதல் கட்டமாக உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம் மற்றும் வெள்ளக்கோவில் ஆகிய பகுதிகளுக்கு நவம்பர் 15-ந்தேதி வரை நெல் பயிர்காப்பீடு குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. தொடர்ந்து, நவம்பர் 16 முதல் டிசம்பர் 15 வரை திருப்பூர், மூலனூர், குடிமங்கலம், பொங்கலூர், குண்டடம், பல்லடம், அவிநாசி மற்றும் ஊத்துக்குளி ஆகிய பகுதிகளுக்கு நிலக்கடலை, கொத்துமல்லி, மிளகாய், தக்காளி, வெங்காயம், வாழை, மரவள்ளி, கொண்டைக்கடலை, மக்காச்சோளம் ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. மேலும், பயிர் காப்பீடு தொகை மற்றும் காப்பீடு செய்ய கடைசி நாள் போன்ற விபரங்கள் இவ்வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். எனவே விவசாயிகள் பயிர் காப்பீடு தொடர்பான விபரங்களை தெரிந்து கொண்டு பயிர் காப்பீடு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News