தோட்டத்தில் தேனீ வளர்த்தால் காய்கறி, பழ மகசூல் அதிகரிக்கும் - தோட்டக்கலைத்துறை தகவல்
- மண்புழுக்கள் எப்படி வேளாண்மைக்கு நன்மை தருகிறதோ, அதே போல் தேனீக்களும் விளைச்சலுக்கு நன்மை தருகின்றன.
- பூக்களில் இருந்து மகரந்த சேர்க்கை செய்யும் போது, காய் பிடிப்பு அதிகரிக்கிறது.
குடிமங்கலம் :
காய்கறி மற்றும் பழத்தோட்டங்களில் தேனீ வளர்த்தால் 30 சதவீதம் மகசூல் அதிகரிக்கும் என தோட்டக்கலை த்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து திருப்பூர் மாவட்ட தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது :- மண்புழுக்கள் எப்படி வேளாண்மைக்கு நன்மை தருகிறதோ, அதே போல் தேனீக்களும் விளைச்சலுக்கு நன்மை தருகின்றன. இந்த விபரம் பல விவசாயிகளுக்கு தெரிவதில்லை.தேனீக்கள் காய்கறி செடிகள் மற்றும் பழச்செடிகளில் உள்ள பூக்களில் இருந்து மகரந்த சேர்க்கை செய்யும் போது, காய் பிடிப்பு அதிகரிக்கிறது.
பல்வேறு மலர்களில் இருந்து தேனீக்கள் தேனை சேகரிக்கும் போது மகரந்த கலப்பு ஏற்பட்டு நல்ல விளைச்சல் கிடைக்கிறது. அதனால் காய்கறி மற்றும் பழப்பயிர்கள் பயிரிட்டுள்ள விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் தேனீ பெட்டி வைத்து தேனீ வளர்ப்பது நல்லது.இதன் மூலம் தோட்டப்பயிர்களின் மகசூல் 30 சதவீதத்துக்கு மேல் அதிகரிப்தோடு தேன் மூலமும் வருமானம் கிடைக்கும்.தோட்டக்கலை துறை சார்பில் தேனீ வளர்க்கும் பெட்டி, மானிய விலையில் வழங்கப்படு கிறது. தேனீ வளர்ப்பு குறித்து பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு 1000 தேனீ பெட்டிகள் வழங்கப்ப ட்டன. இந்த ஆண்டு இரண்டாயிரம் தேனீ பெட்டிகள், தேன் பூச்சியுடன் வழங்கப்படுகிறது. தேனை பிரித்து எடுக்கும் கருவியும் மானியத்தில் பெறலாம். தேனீ வளர்ப்பில் ஆர்வம் உள்ள விவசாயிகள், தோட்டக்கலைத்துறை அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். தேவையான உதவியும், ஆலோசனையும் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.