உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

திருப்பூர் மாவட்டத்தில் சோளம் சாகுபடி 3 மடங்கு அதிகரிப்பு

Published On 2023-03-20 06:45 GMT   |   Update On 2023-03-20 06:45 GMT
  • சோளம் உற்பத்தியில் திருப்பூர் மாவட்டம் 14வது இடத்தில் உள்ளது.
  • 6,397 மெட்ரிக் டன் சாகுபடி செய்யப்படுகிறது.

காங்கயம் :

மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் பாரம்பரிய உயர்தர உள்ளூர் ரகங்கள் சாகுபடி குறித்த கருத்தரங்கு மற்றும் சர்வதேச சிறுதானிய ஆண்டு நிகழ்ச்சி நடந்தது. நத்தக்காடையூர் பி.இ.டி., கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியை அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் துவக்கி வைத்தனர். அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பேசுகையில், தமிழகத்தில், சோளம் உற்பத்தியில் திருப்பூர் மாவட்டம் 14வது இடத்தில் உள்ளது. 6,397 மெட்ரிக் டன் சாகுபடி செய்யப்படுகிறது. கம்பு உற்பத்தியில், 148 மெட்ரிக் டன் சாகுபடி செய்து, 26வது இடத்தில் உள்ளது.மாவட்டத்தில் 90 ஏக்கர் பரப்பளவில் சிறுதானிய சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த2011 -12ம் ஆண்டை ஒப்பிடுகையில் சோளம் சாகுபடி மட்டும் 3 மடங்கு அதிகரித்துள்ளது என்றார்.

தொடர்ந்து வேளாண் பொறியியல் துறை சார்பில், கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 3 விவசாயிகளுக்கு 4.55 லட்சம் ரூபாய் மதிப்பில் வேளாண் உபகரணங்கள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு 41 ஆயிரத்து 267 ரூபாய் மானிய தொகையில் வேளாண் இடுபொருட்கள், பட்டு வளர்ச்சித்துறை சார்பில் மாவட்ட அளவில் சிறந்த பட்டு விவசாயிகளுக்கு 60 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ரொக்கப்பரிசு ஆகியவற்றை அமைச்சர்கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.

நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல தலைவர் பத்மநாபன், காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மகேஷ்வரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் கிருஷ்ண வேணி, திட்ட ஒருங்கிணைப்பாளர் இளையராஜா, வேளாண் துறை இணை இயக்குனர் மாரியப்பன், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் சுரேஷ்ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News