- மீன் பிடிக்க சென்றபோது விபரீதம்
- போலீசார் விசாரணை
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே உள்ள செலந்தம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிவா (வயது 45). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி லதா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தொடர்மழை காரணமாக செலந்தம் பள்ளி ஏரி நிறைந்து உபரி நீர் வெளியேறி வருகிறது. ஏரியில் அதிகளவில் மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் ஏரியில் மீன் பிடிக்க சிவா சென்றுள்ளார். அப்போது, திடீரென அவர் ஏரியில் மூழ்கியதாக அங்கிருந்தவர்கள் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அதுபற்றி குடும்பத்தினர் திருப்பத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் ஏரிக்கு வந்து சுமார் 2 மணி நேரம் தேடியும் சிவா கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று அதிகாலை சிவாவின் உடல் ஏரியில் கரை ஒதுங்கியது.
இதுகுறித்து அவரது மனைவி லதா கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.