புதுப்பேட்டை சாலையில் தேங்கியுள்ள தண்ணீரை தாசில்தார் குமார் அகற்றிய காட்சி.
குளம் போல் தேங்கிய தண்ணீர் அகற்றம்
- தாசில்தாருக்கு பொதுமக்கள் பாராட்டு
- வாகன ஓட்டிகள் கடும் அவதி
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த அம்மணாங்கோவில் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட புதுப்பேட்டை பகுதியில் நாட்டறம்பள்ளி திருப்பத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் பெய்த மழையின் காரணமாக சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது.
இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் தலைமையில் வருவாய் துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்தனர்.
இடையூறாக உள்ள மேட்டுப்பகுதியில் தண்ணீர் செல்வதற்கு வழிவகை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார்.
அதன் பிறகு உடனடியாக திருப்பத்தூர் நெடுஞ்சாலை துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் மேற்படி பகுதியில் தேங்கிய நீரை வெளியேற்றுவதற்கு தேவையான பணிகளை மேற்கொண்டனர். குளம் போல் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
கொட்டும் மழையில் நின்று தண்ணீர் அகற்றும் பணியில் தாசில்தார் ஈடுபட்டார்.
இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து நாட்டறம்பள்ளி தாசில்தாரை பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.