உள்ளூர் செய்திகள்

திருட்டுத்தனமாக மது விற்பதை தடுக்க வலியுறுத்தி கம்பைநல்லூர் அருகே சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.

கம்பைநல்லூர் அருகே இன்று காலை திருட்டுத்தனமாக மது விற்பதை தடுக்க கோரி பொதுமக்கள் சாலைமறியல்

Published On 2022-10-10 14:49 IST   |   Update On 2022-10-10 14:49:00 IST
  • மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பது தொடர்ந்து நடந்து வருவதாக கூறப்படுகிறது.
  • ஏராளமான பெண்கள், மாணவ,மாணவிகள் திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர்.

மொரப்பூர்,

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகேயுள்ள நவலை கிராமத்தில் விடிய,விடிய திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பது தொடர்ந்து நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் பல குடும்பங்களின் நிம்மதி தொலைந்து கணவன்,மனைவி இடையே தகராறுகள் ஏற்பட்டு வருகிறது.சில நேரங்களில் இந்த தகராறு தற்கொலையில் முடியும் சோகமும் நிகழ்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட மது குடிப்பதை மனைவி தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இப்பகுதியில் மது விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பலமுறை போலீசில் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை 7 மணியளவில் மொரப்பூர்-கம்பை நல்லூர் சாலையில் நவலை கிராமத்தில் ஏராளமான பெண்கள், மாணவ,மாணவிகள் திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த சாலையில் போக்குவரத்து முடங்கியது. மறியல் பற்றிய தகவல் அறிந்த கம்பைநல்லூர் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது திருட்டுத்த னமாக மது விற்பனை நடப்பதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். சம்பவ இடத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகளும் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கள்ளத்தன மது விற்பனைக்கு எதிராக நடந்த இந்த மறியலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News