உள்ளூர் செய்திகள்

மாடு போல வேடமிட்டு அரிசி, தவிடு சாப்பிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-08-02 08:00 GMT   |   Update On 2023-08-02 08:00 GMT
  • மாட்டு கொட்டகைக்கு வேண்டி மனு கொடுத்தும் பலன் இல்லை
  • என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர்

செய்யாறு:

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்திற்கான விவசாயிகள் குறை தீர்வுகூட்டம் கீழ் புதுப்பாக்கம் கிராமத்தில் சமுதாயக் கூடத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு உதவி கலெக்டர் ஆர். அனாமிகா தலைமை தாங்கினார்.

தாசில்தார்கள் முரளி, ராஜலட்சுமி ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். செய்யாறு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகம் வரவேற்றார். கூட்டத்தில் வேளாண் பயிர்க் காப்பீட்டில் தனியார் நிறுவனத்தை சேர்க்க கூடாது என்றும், மாட்டு கொட்டகைக்கு வேண்டி மனு கொடுத்தும் பலன் இல்லை எனவும், கூட்டத்தை செய்யாறு தாசில்தார் அலுவலகத்தில் நடத்த வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

அப்போது விவசாயிகள் கழுத்தில் என்எல்சி என்ற விளம்பர பதாகை தொங்கவிட்டபடி நெல் பயிர்களை அழித்துவிட்டு என்னதான் நீங்கள் சாப்பிட போகிறீர்கள் என கேள்வி கேட்கும் விதமாக விவசாயிகள் மாடுகள் போல வேடமிட்டு அரிசி, தவிடு கலந்துள்ள தண்ணீரை மாடுகள் போல மண்டியிட்டு குடித்தும், அகத்திக்கீரை தழை சாப்பிட்டும், என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாளிகைப்பட்டு ராஜ், பெருங்களத்தூர் ரகுபதி, சிருங்கட்டூர் முருகன், ஏனாதவாடி கஜேந்திரன், பில்லாந்தி தட்சிணாமூர்த்தி, திருபூண்டி ரகுபதி, அகத்தேரிபட்டு கிருஷ்ணன் ,கீழ் புதுப்பாக்கம் முனிரத்தினம் ஆகிய உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News