கூட்டத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி பேசினார்.
ஒட்டன்சத்திரத்தில் குடிநீர் தேவைக்கு அரசு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்
- ஒட்டன்சத்திரம் நகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
- நகர மன்ற உறுப்பினர்கள், துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஒட்டன்சத்திரம்:
உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் நகராட்சியில் நடைபெற்ற வார்டு கமிட்டி-பகுதி சபா குழு கூட்டத்தில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்து கொண்டு பேசியதாவது:-
ஒட்டன்சத்திரம் நகராட்சியில் குப்பை பெரும் பிரச்சினையாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஒட்டன்சத்திரம் நகராட்சியை தூய்மை நகராட்சியாக மாற்ற 20 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. பொதுமக்கள் மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை தரம் பிரித்துக் கொடுத்தால் நகராட்சி பணியாளர்கள் எடுத்துச் செல்ல ஏதுவாக இருக்கும்.
ஒட்டன்சத்திரம் நகராட்சி, ஒன்றியம், நெய்க்காரப்பட்டி, தொப்பம்பட்டி, கீரனூர் பேரூராட்சி ஆகிய பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ. 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு திண்டுக்கல்லில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசாணை வெளியிட்டார். இதற்கு விரைவில் டெண்டர் விடப்பட உள்ளது. ஒட்டன்சத்திரம் நகராட்சியில் பாதாள சாக்கடை அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். மேலும் பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
இக்கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் தேவிகா, பழனி கோட்டாட்சியர் சிவகுமார், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் முத்துசாமி, நகர் மன்ற தலைவர் திருமலைசாமி, நகர் மன்றதுணைத் தலைவர் வெள்ளைச்சாமி, நகராட்சி பொறியாளர் சக்திவேல், நகராட்சி மேலாளர் உமா காந்தி, நகர ஊர் அமைப்பு ஆய்வர் ரவிச்சந்திரன், துப்புரவு ஆய்வாளர் ரவிசங்கர், நகராட்சி வருவாய் ஆய்வாளர் சேக் அப்துல்லா, நகராட்சி இளநிலை உதவியாளர்கள் ஈஸ்வரன், கண்ணன், நகராட்சி பணி ஆய்வாளர் முகமது ஆசிக் உமர், நகர மன்ற உறுப்பினர்கள், துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி தலைமை கணக்கர் சரவணகுமார் நன்றி கூறினார்.