அரசு துறைகளில் தற்காலிக பணி நியமனத்தை கைவிட வேண்டும்- அரசு பணியாளர் சங்கத்தினர் வலியுறுத்தல்
- அரசு துறைகளில் தற்காலிக பணி நியமனத்தை கைவிட வேண்டும்.
- சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணி காலமாக வழங்க வேண்டும்.
தருமபுரி,
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் ரதி வரவேற்றார்.நிர்வாகிகள் பரமசிவம்,மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் தருமபுரி மாவட்ட செயலாளர் மணி, அரசு பணியாளர் சங்க முன்னாள் மாநில துணைத்தலைவர் கோவிந்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணி காலமாக வழங்க வேண்டும். பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட தினக்கூலி பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். ஈட்டிய விடுப்பு பலன் வழங்க வேண்டும். அரசு துறைகளில் தற்காலிக பணி நியமனத்தை கைவிட வேண்டும். அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டன.
கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் பாஸ்கர், சாலைப்பணியாளர் சங்க மாவட்ட தலைவர் பழனி,அரசு பணியாளர் சங்கத்தின் சேலம் மாவட்ட செயலாளர் காதர்மொய்தீன், அங்கன்வாடி மற்றும் உதவியாளர் சங்க மாவட்டத்தலைவர் ராசாத்தி, வருவாய்த்துறை மாவட்ட அமைப்பாளர் நிர்மல் உள்ளிடோர் கலந்து கொண்டு பேசினர்.கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் இணைச் செயலாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.