உள்ளூர் செய்திகள்

தஞ்சை பூக்காரத்தெரு சுப்பிரமணியசாமி கோவில் யாகசாலை பூஜைகள் தொடங்கின

Published On 2023-09-01 09:07 GMT   |   Update On 2023-09-01 09:07 GMT
  • குடமுழுக்கு விழா கடந்த 29-ந்தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.
  • இன்று காலை 2-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

தஞ்சாவூர்:

தஞ்சை பூக்கார த்தெருவில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுப்பிரமணியசாமி, வள்ளி, தேவசேனையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு கோவிலில் குடமுழுக்கு பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் முடிந்து விட்டதால் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாளை மறுநாள் ( ஞாயிற்றுக்கிழமை ) குடமுழுக்கு நடைபெற உள்ளது.

இதையொட்டி குடமுழுக்கு விழா கடந்த 29-ந்தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.

இதையொட்டி நேற்று தஞ்சை சிவகங்கை பூங்காவில் இருந்து புனித நீர் யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மேளதாளங்கள் முழங்க முளைப்பாரி கோவிலுக்கு எடுத்து வந்தனர்.

தொடர்ந்து நேற்று இரவு முதல்கால யாகாசாலை பூஜை தொடங்கியது.

இன்று காலை 8.30 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜையும், நாளை காலை 8.45 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜையும், மாலை 6.30 மணிக்கு 5-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெறுகிறது.

நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜையும், 9.30 மணிக்கு கடம் புறப்பாடும் 10.15 மணிக்கு குடமுழுக்கு விழாவும் நடைபெறுகிறது. 11.45 மணிக்கு மகா அபிசேஷகமும், தீபாராதனையும் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு மயில் வாகனத்தில் சாமி வீதி உலாவும் நடைபெறுகிறது. 

Tags:    

Similar News