உள்ளூர் செய்திகள்

வேலூரில் இருந்து வால்பாறைக்கு ஓடி வந்தனர்- கள்ளக்காதலனுடன் விஷம் குடித்த இளம்பெண் மரணம்

Published On 2022-09-04 09:26 GMT   |   Update On 2022-09-04 09:26 GMT
  • சசிகலாவிற்கு தனது குழந்தைகளின் நினைவு வந்தது. அவர்களின் எதிர்காலம் பற்றி நினைத்து கவலை அடைந்து வந்தார்.
  • சம்பவத்தன்று அவர் தனது கள்ளக்காதலனிடம் குழந்தைகள் பற்றி கூறி மனவேதனை அடைந்தார்.

கோவை:

வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி சசிகலா (வயது 25). இவர் அங்கு காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவர்களுக்கு 9 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் சசிகலாவிற்கு, அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினரான ஸ்ரீராகுல் (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் சசிகலா வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் கள்ளக்காதலனுடன் கோவை மாவட்டம் வால்பாறைக்கு வந்தனர். அங்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கி 2 பேரும் கணவன்-மனைவி போல வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் சசிகலாவிற்கு தனது குழந்தைகளின் நினைவு வந்தது. அவர்களின் எதிர்காலம் பற்றி நினைத்து கவலை அடைந்து வந்தார். சம்பவத்தன்று அவர் தனது கள்ளக்காதலனிடம் குழந்தைகள் பற்றி கூறி மனவேதனை அடைந்தார்.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த 2 பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். சம்பவத்தன்று 2 பேரும் வால்பாறையில் உள்ள பூங்காவிற்கு சென்றனர். பின்னர் அங்கு வைத்து 2 பேரும் விஷத்தை குடித்து மயங்கி விழுந்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு வந்தவர்கள் அவர்களை மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சசிகலா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். கள்ளக்காதலனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வால்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News