உள்ளூர் செய்திகள்

போலீஸ் நிலையத்தில் விஷம் குடித்த விவசாயி- செல்போனில் பேசியபடி வேடிக்கை பார்த்த பெண் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

Published On 2023-02-13 15:54 IST   |   Update On 2023-02-13 15:54:00 IST
  • சண்முகலெட்சுமி மீது விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவிட்டார்.
  • அறிக்கை அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமியை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.

கொடைரோடு:

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள கன்னிமார் நகரைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 45). இவரது மகன் சதீஸ் கண்ணன் (வயது 23). நிலப்பிரச்சினை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த சங்கர், நாச்சியப்பன், சின்னக்கருப்பு உள்ளிட்ட சிலர் பாண்டி மற்றும் அவரது மகனிடம் தகராறு செய்தனர்.

மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர். இது குறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் நிலக்கோட்டை கோர்ட்டில் பாண்டி புகார் அளித்தார். கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் அம்மையநாயக்கனூர் போலீசார் விசாரணை நடத்தவில்லை. இதனால் சம்பவத்தன்று அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையம் முன்பு பாண்டி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அதன் பிறகு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உயிரிழந்த பிறகு போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் பாண்டி விஷம் குடித்து போலீஸ் நிலையம் முன்பு நியாயம் கேட்ட போது அங்கு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் சண்முகலெட்சுமி அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் செல்போனில் பேசியபடி இருந்தார்.

பாண்டி விஷம் குடித்து புலம்பியபடி மயங்கி விழுந்தபோதும் அவர் கண்டுகொள்ளவில்லை. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சண்முகலெட்சுமி மீது விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவிட்டார். அறிக்கை அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமியை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News