உள்ளூர் செய்திகள்

7 ஆண்டு போராடி சொத்தில் சம உரிமை- கருணாநிதி நினைவிடத்தில் பட்டாவை வைத்து பெண் நெகிழ்ச்சி

Published On 2023-06-04 09:51 GMT   |   Update On 2023-06-04 09:51 GMT
  • அம்பிகா கடந்த 2016 -ம் ஆண்டு முதல் கோர்ட்டில் சட்ட போராட்டம் நடத்தினார்.
  • மறைந்த முதலமைச்சர் கருணாநிதி, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு என்ற சட்டத்தை நிறைவேற்றி தந்தார்.

பொன்னேரி:

பொன்னேரி நிலவள வங்கி தெரு பகுதியைச் சேர்ந்தவர் விநாயகம். இவரது மனைவி அம்பிகா (70). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

அம்பிகா, கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாய் பகுதியில் வசிக்கும் தனது குடும்பத்தினரிடம் சொத்தில் சம உரிமை கேட்டார். இதற்கு அவரது 2 தம்பிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அம்பிகா கடந்த 2016 -ம் ஆண்டு முதல் கோர்ட்டில் சட்ட போராட்டம் நடத்தினார். இதைத்தொடர்ந்து அவரது 7 வருட போராட்டத்திற்கு பின்னர் அவருக்கு 1 ஏக்கர்15 சென்ட் நிலத்தை வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த வாரத்தில் வருவாய்த் துறை அதிகாரிகள் அளவீடு செய்து அம்பிகாவுக்கு பட்டா வழங்கினர்.

இந்த நிலையில் இந்த இடத்திற்கான பட்டாவை அம்பிகா, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நினைவிடத்தில் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்த வீடிேயா தற்போது வைரலாக பரவிவருகிறது.

இதுகுறித்து அம்பிகா கூறும்போது, மறைந்த முதலமைச்சர் கருணாநிதி, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு என்ற சட்டத்தை நிறைவேற்றி தந்தார். எனவே அவரது நினைவிடத்தில் எனக்கு சட்டபோராட்டத்தினால் கிடைத்த பட்டாவை வைத்து அஞ்சலி செலுத்தினேன் என்றார்.

Tags:    

Similar News