உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கிராமமக்கள் போராட்டம்

Published On 2022-12-20 10:04 GMT   |   Update On 2022-12-20 10:04 GMT
  • வெங்கத்தூர் முதல் நிலை ஊராட்சியில் சேரும் குப்பைகளை வெங்கத்தூர் 15-வது வார்டில் குப்பை கிடங்கு அமைத்து கொட்டி வருகின்றனர்.
  • கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 டிராக்டர்களில் குப்பைகளை கொட்ட வந்த போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு திருப்பி அனுப்பினர்.

திருவள்ளூர்:

கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர் முதல் நிலை ஊராட்சிக்கு உட்பட்டது வெங்கத்தூர் பகுதி. வெங்கத்தூர் 15-வது வார்டில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் வெங்கத்தூர் முதல் நிலை ஊராட்சியில் சேரும் குப்பைகளை வெங்கத்தூர் 15-வது வார்டில் குப்பை கிடங்கு அமைத்து கொட்டி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 டிராக்டர்களில் குப்பைகளை கொட்ட வந்த போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு திருப்பி அனுப்பினர்.

இதற்கிடையே வெங்கத்தூர் 15-வது வார்டு பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் மக்கள் தொகை அதிகமாக உள்ளதால் தனி ஊராட்சியாக மாற்ற வலியுறுத்தியும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் அனைவரும் கைகளில் பதாகைகள் ஏந்தி கலெக்டர் அலுவலக நுழை வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீசை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், எங்கள் பகுதியில் குப்பை கொட்டுவதால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. உடனடியாக குப்பையை கொட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் வெங்கத்தூர் 15-வது வார்டை தனி ஊராட்சியாக மாற்ற வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

Tags:    

Similar News