உள்ளூர் செய்திகள்

கோவிலை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விசிக, பொதுமக்களுடன் மறியல்

Published On 2024-02-14 15:48 IST   |   Update On 2024-02-14 15:48:00 IST
  • கோவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் இடிக்கப்பட்டது.
  • ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர். நுழைவு பகுதியில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

ஈரோடு:

ஈரோடு சூரம்பட்டி வலசு, மேற்கு அம்பேத்கர் வீதியில் 75 ஆண்டுகள் பழமையான மாகாளியம்மன் கோவில் இருந்தது. இந்த கோவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் இடிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சாதிக் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கோவிலை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பன்னீர்செல்வம் பார்க் ரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள், மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சாதிக், முதன்மை செயலாளர் ஏ.சி.பாவரசு, துணை பொதுச்செயலாளர் கனி அமுதன், வடக்கு மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் தலைமையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஏ.டி.எஸ்.பி. ராஜேந்திரன், டி.எஸ்.பி. ஆறுமுகம் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் அவர்களை அப்புறப்படுத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர். நுழைவு பகுதியில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

அதையும் மீறி அவர்கள் உள்ளே சென்றனர். பின்னர் முக்கிய நிர்வாகிகள் மட்டும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு உள்ளே அனுமதிக்கப்பட்டு எஸ்.பி. ஜவகரை சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News