உள்ளூர் செய்திகள்

இருசக்கர வாகனத்தை திருடிய 2 வாலிபர்கள்: வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் பரபரப்பு

Published On 2024-01-28 08:15 GMT   |   Update On 2024-01-28 08:15 GMT
  • கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிள்ளையார் கோவில் தெருவில் இருசக்கர வாகனத்தை 2 வாலிபர்கள் சேர்ந்து திருடி சென்றனர்.
  • சம்பவம் குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவேரிப்பட்டணம்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாக காவேரிப்பட்டணம் நகரம் திகழ்ந்து வருகிறது. இந்நகரை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன.

இந்நகரில் ஏராளமான அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், வங்கிகள், பள்ளிகள், வணிக நிறுவனங்கள், தொழிற் சாலைகள் என ஏராளமானவை உள்ளன. அவற்றிற்கு தினமும் பல தரப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களும் வந்து செல்கின்றனர்.

காவேரிப்பட்டணம் நகரின் முக்கிய பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் மற்றும் குற்ற செயல்களை தடுத்திடவும் சி.சி.டிவி. கேமரா அமைத்து, அவற்றின் மூலம் போலீசார் கண்காணித்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிள்ளையார் கோவில் தெருவில் இருசக்கர வாகனத்தை 2 வாலிபர்கள் சேர்ந்து திருடி சென்றனர். அவர்கள் வாகனத்தை கொண்டு செல்வதை அங்கு ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவானது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது பற்றி பொதுமக்கள் கூறியதாவது:

காவேரிப்பட்டணம் நகரின் எந்த பகுதியிலும் போலீசார் சி.சி.டிவி கேமராக்கள் அமைக்கவில்லை. இதனால் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற நிலையும், அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருடும் போகிறது. மேலும் குற்றங்கள் நடைபெற்றால் அவற்றை கண்டறியவும் முடியாத அவலநிலை உள்ளது.

காவேரிப்பட்டணம் நகரின் அனைத்து பகுதிகளிலும் முறையாக சி.சி.டிவி கேமரா பொருத்தி அவற்றின் மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் நகரில் உள்ள பொதுமக்களின் பாதுகாப்பினையும், குற்ற செயல் தடுப்பு நடவடிக்கையும் மேம்படுத்திட முடியும்.

மேலும் ஒன்றை மாதத்திற்குள் காவேரிப்பட்டணம் அங்காளம்மன் திருவிழா நடக்க உள்ளது. இதற்கு சுமார் 1½ லட்சம் பக்தர்கள் இந்த திருவிழாவுக்கு வருவார்கள். அதற்குள் காவேரிப்பட்டணம் பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைத்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News