உள்ளூர் செய்திகள்

பள்ளிபாளையம் அருகே டிராக்டர் மோதி தாய்-மகள் பலி

Published On 2023-07-16 04:21 GMT   |   Update On 2023-07-16 04:21 GMT
  • முன்னால் சென்று கொண்டிருந்த கரும்பு லோடு டிராக்டரை இந்துமதி முந்தி செல்லும்போது எதிரே திடீரென லாரி வந்தது.
  • டிராக்டர், கண் இமைக்கும் நேரத்திற்குள் மொபட் மீது ஏறி இறங்கியது. இதில் இந்துமதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

பள்ளிபாளையம்:

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த சின்னாரபாளையத்தை சேர்ந்தவர் ராஜவேலு. விவசாயியான இவருக்கு தவமணி (வயது 50) என்ற மனைவியும், 4 மகள்களும் உள்ளனர்.

மூத்த மகள் இந்துமதி (25), சென்னையில் உள்ள பிரபல தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இந்துமதிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

நேற்று மாலை தனது சொந்த ஊரான சின்னாரபாளையத்தில் உள்ள வீட்டிலிருந்து தவமணியும், இந்துமதியும் திருச்செங்கோடு அருகே உள்ள இறையமங்கலம் சென்றனர். இந்துமதியின் தங்கையை பார்த்துவிட்டு இவருவரும், மொபட்டில் இரவு வீட்டுக்கு திரும்பினர்.

இரவு 7 மணி அளவில் கொக்கராயன்பேட்டையை அடுத்துள்ள கோம்புமேட்டில் இருவரும் வந்து கொண்டிருந்தனர். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த கரும்பு லோடு டிராக்டரை இந்துமதி முந்தி செல்லும்போது எதிரே திடீரென லாரி வந்தது. இதனால் நிலை தடுமாறிய இந்துமதி மொபட்டுடன் கீழே விழுந்தார்.

அப்போது டிராக்டர், கண் இமைக்கும் நேரத்திற்குள் மொபட் மீது ஏறி இறங்கியது. இதில் இந்துமதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது தாய் தவமணி பலத்த காயங்களுடன் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதிக்க டாக்டர்கள், தவமணி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்துமதி, தவமணி உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

இந்த விபத்து குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News