உள்ளூர் செய்திகள்

ஓடும் ரெயிலில் இருந்து குதித்த சுற்றுலா பயணி பலி

Published On 2023-11-21 06:34 GMT   |   Update On 2023-11-21 06:35 GMT
  • கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் முதலாவது பிளாட்பாரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
  • சுற்றுலா வந்த இடத்தில் ரெயிலில் இருந்து தவறி விழுந்து ராம் சுஷில் திவாரி பலியானது அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாகர்கோவில்:

மத்திய பிரதேச மாநிலம் கோந்தாரி பச்சோகர் பகுதியை சேர்ந்தவர் ராம் சுஷில் திவாரி (வயது 70). இவரும் அதே பகுதியை சேர்ந்த சுமார் 35 பேர் தமிழகத்திற்கு சுற்றுலா வந்தனர்.

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த இவர்கள் நேற்று காலையில் சூரிய உதயம் மற்றும் சூரியன் மறையும் காட்சியை பார்த்து விட்டு மதுரைக்கு செல்வதற்காக தயாரானார்கள். இதையடுத்து கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வந்தனர்.

புனலூரில் இருந்து மதுரை செல்லும் ரெயிலுக்காக நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் உள்ள முதலாவது பிளாட்பாரத்தில் காத்திருந்தனர். புனலூரில் இருந்து இரவு 10.50 மணிக்கு ரெயில் வரும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் முதலாவது பிளாட்பாரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த ரெயிலில் ராம் சுஷில் திவாரி கழிவறைக்கு செல்வதற்காக ஏறினார். கழிவறைக்கு சென்று விட்டு அவர் இறங்குவதற்குள் கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இதையடுத்து அவர் ரெயிலில் இருந்து குதித்தார். அப்போது எதிர்பாராத விதமாக ராம் சுஷில் திவாரி ரெயில் தண்டவாளத்தில் தவறி விழுந்தார்.

தவறி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்து அவருடன் வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்த ராம் சுஷில் திவாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இதையடுத்து அவருடன் வந்தவர்கள் அனைவரும் சோகத்துடன் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ளனர்.

சுற்றுலா வந்த இடத்தில் ரெயிலில் இருந்து தவறி விழுந்து ராம் சுஷில் திவாரி பலியானது அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News