உள்ளூர் செய்திகள்
சஸ்பெண்டு செய்யப்பட்ட தலைமை ஆசிரியை கிருஷ்ணகுமாரி.

காலாண்டு தேர்வில் மாணவர்கள் பார்த்து எழுத அனுமதித்த தலைமை ஆசிரியை சஸ்பெண்டு

Published On 2022-09-28 04:45 GMT   |   Update On 2022-09-28 04:45 GMT
  • பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ஒருவர் தனது குழந்தைக்கு உணவு கொடுக்க பள்ளிக்கு வந்த போது 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் அருகருகே அமர்ந்து தேர்வு எழுதிக் கொண்டிருந்ததை கண்டு அவர் தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்தார்.
  • மாவட்ட கல்வி அலுவலர் ராமசாமி விசாரணை நடத்தி தலைமை ஆசிரியை கிருஷ்ணகுமாரியை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

பவானி:

பவானி நகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகர் பகுதியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் பெருமாள்புரம், அண்ணா நகர், காமராஜ் நகர், சொக்கார அம்மன் நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 250 மாணவ, மாணவிகள் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் தமிழ் ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் கிருஷ்ணகுமாரி என்பவர் பணியாற்றி வருகிறார். அதேபோல் பட்டதாரி ஆசிரியர் 3 பேர், இடைநிலை ஆசிரியர் 5 பேர் என 9 பேர் பணியாற்றி வருகின்றனர். தற்போது இந்த பள்ளியில் 8-ம் வகுப்புக்கான காலாண்டு தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது.

இந்நிலையில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ஒருவர் தனது குழந்தைக்கு உணவு கொடுக்க பள்ளிக்கு வந்த போது 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் அருகருகே அமர்ந்து தேர்வு எழுதிக் கொண்டிருந்ததை கண்டு அவர் தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்தார்.

பின்னர் மாணவ, மாணவிகள் தேர்வை பார்த்து எழுதுவதாக குற்றம் சாட்டி சமூகவலைதளத்தில் அந்த வீடியோவை வெளியிட்டார். அதேபோல் பள்ளி தலைமை ஆசிரியர் மீது பள்ளி மேலாண்மை குழுவினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை மாவட்ட கல்வி அலுவலரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளதாக தெரிகிறது.

தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பல்வேறு கட்ட போராட்டங்கள் செய்யப் போவதாக பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் பெற்றோர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் ராமசாமி விசாரணை மேற்கொண்டு தலைமை ஆசிரியை கிருஷ்ணகுமாரி மீது துறை ரீதியான ந டவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பெற்றோர்கள் திரும்பி சென்றனர்.

இதை தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் ராமசாமி விசாரணை நடத்தி தலைமை ஆசிரியை கிருஷ்ணகுமாரியை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறும்போது, பள்ளி நேரத்தின் போது உள்ளே வந்து யாரும் செல்போன் எடுக்க கூடாது. அதையும் மீறி சிலர் பள்ளி மேலாண்மை குழு என தெரிவித்து செல்போன் மூலம் படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பரப்பி விட்டு இன்று எங்கள் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

நாங்கள் எவ்வளவோ முறை சொல்லியும் வீடியோ எடுக்க வேண்டாம் எனக் கூறியும் அவர்கள் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பரப்பி விட்டு இந்த பள்ளிக்கு அவ பெயர் ஏற்படுத்தி உள்ளனர்.

அதே போல் ஒரு சின்ன சின்ன விஷயங்களை கூட பெரிய விஷயமாக மாற்றி வருகின்றனர் என்றனர்.

Tags:    

Similar News