உள்ளூர் செய்திகள்

தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 20 அடியை தாண்டியது

Published On 2022-11-12 07:33 GMT   |   Update On 2022-11-12 07:33 GMT
  • செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை 21 அடியில் வைத்து கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
  • மழையின் அளவையும், ஏரிக்கு வந்து கொண்டிருக்கும் நீர்வரத்தையும் 3 மணி நேரத்திற்கு ஒருமுறை அதிகாரிகள் கணக்கீடு செய்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

பூந்தமல்லி:

சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குடிநீர் ஆதாரமாக உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று காலை நிலவரப்படி மொத்த நீர்மட்ட உயரமான 24 அடியில், தற்போது 20.15 அடி தண்ணீர் உள்ளது. நீர் வரத்து 1510 கன அடியும், நீர் வெளியேற்றம் 500 கன அடியாகவும் உள்ளது.

மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடியில் தற்போது 2641 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பது அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை 21 அடியில் வைத்து கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதனால் மழையின் அளவையும், ஏரிக்கு வந்து கொண்டிருக்கும் நீர்வரத்தையும் 3 மணி நேரத்திற்கு ஒருமுறை அதிகாரிகள் கணக்கீடு செய்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News